கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வீதி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது 

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வண்டியும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த அரைச் சொகுசு லேலண்ட் பஸ் வண்டியும் கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசல் வளைவில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நேருக்குநேர் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்தலத்திலேயே இரு பெண்களும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு ஆணுமாக மூவர் மரணித்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  அருகிலுள்ள கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவர்களின் ஜனாசாக்களும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

மரணித்தவர்கள் கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய சல்மான் பாரிஸ், சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சலீமா தமீம் ( மின்னா), அக்கரைப்பற்று மத்திய வீதியைச் சேரந்த 55 வயதுடைய பீபி பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை 18 என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ நேரம் இரண்டு பஸ்களின் சாரதிகளும் மது அருந்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Advertisement

0 comments:

Post a Comment

 
Top