யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரான சொ.இளங்குமரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நேற்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


இப் போராட்டங்களின் போது குறித்த விரிவரையாளரின் கொடும்பாவி மாணவர்களால் எரிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய பிரத்தியேக அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மதிப்பிற்குரிய ஆசான்களே காமுகர்களை வெளியேற்ற உதவுங்கள், நிர்வாகமே படிக்க வந்த எங்களை தீய எண்ணங்கொண்டு அணுகும் கொடியவர்களை உடன் வெளியேற்று, இச்சைக்கு ஆசைப்பட்டு புள்ளிகளை பிச்சை போட நினைக்காதே, காமவெறியனை இனங்காட்டியும் குற்றவாளி என நிரூபித்துத் தண்டனை வழங்க நிர்வாகமே தயங்குவது ஏன்?, காமுகனைக் காப்பாற்றத்துடிக்கும் கயவர்களே நீங்களும் காமுகர்களா?, நிர்வாகமே குற்றம் இழைத்த கயவனை பரீட்சைவிடயங்களில் இருந்து உடன்விலக்கு, ஆசிரியம் என்ற புனிதத் தொழிலை நாசம் செய்வதா உனது தொழில் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விரிவிரையாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளபோதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டி மாணவர்களால் இப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top