வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் அந்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.


 திங்களன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், யாழ்ப்பாணம் குரநகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளதுடன், இந்திய அரசின் உதவியில் காங்கேசன்துறை துறைமுகப்பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களை அகற்றி அதனை ஆழமாக்கும் பணிகள் முடிவடைந்து அதனை இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் வைபவ ரீதியாகக் கையளித்திருக்கின்றார்.

 குருநகர் வைபவத்தில் உரையாற்றிய இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல விடயங்களில் இந்திய அரசு இங்குள்ள மக்களுக்கு உதவியிருக்கின்றது என கூறியுள்ளார். ‘இந்த வகையில் 17 பில்லியன் இலங்கை ரூபா செலவில் 36 வேலைத்திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னும் 24 வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் வேலைகளில் மதவாச்சியில் இருந்து மடுறோட் வரையிலான பகுதியில் வேலைகள் முடிவடைந்துவிட்டன.

 வரும் 14 ஆம் திகதி அந்தப் பாதையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேபோன்று மடுறோட்டில் இருந்து தலைமன்னார் வரையிலான பாதையும், ஓமந்தையில் இருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் பாதையும் முடிக்கப்பட்டதும், வரும் மார்ச் மாதம் தலைமன்னாருக்கான ரயில் சேவையும், அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான யாழ் தேவி ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளன’ என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top