இலங்கைச் செஞ்சிலவைச் சங்கத்தின் மன்னார் கிளையானது தனது சமுதாய மீள் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட செயற்றிட்டம்'Integrated Programme for Community Resilience - IPCR மூலம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாதா கிராமம் , பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி , இலுப்பைக்கடவை மற்றும் பாலியாறு கிராமங்களிலும் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க 10 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் 7 பொதுக்கிணறுகள் ஆழ்துளை கிணறுகளாக மாதாகிராமம், பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களில் புனரமைக்கப்பட்டதுடன் 15 இலட்சம் ரூபாய் செலவில் சுகாதார வசதிகளை சீர் செய்யும் நோக்குடன் 34 புதிய மலசலகூட வசதிகள் கள்ளியடி , இலுப்பைக்கடவை மற்றும் பாலியாறு ஆகிய கிராமங்களில் ஏற்படுத்தி 6ம் திகதி திங்கட்கிழமை வைபவரீதியாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

 மேலும் பயனாளிகள் மத்தியில் உளரீதியான மனமாற்றங்களை ஏற்படுத்தி வலுவான சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு ஆகிய துறைகளில் பல்வேறுப்பட்ட செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 இந்த 5 கிராமங்களிலும் 5 முதலுதவி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்கான பயிற்சிகளும் கிரமத்தின் தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்கிராமங்களின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இவ்வருடத்திலும் சுமார் 15 இலட்சம் ரூபாய் கட்டுமான பணிகளுக்காக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற வைபவத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைவர் கௌரவ ஜகத் அபயசிங்ஹ அவர்களின் தலைமையில் மேற்குறிப்பிட்ட கருத்திட்டங்கள் வைபவரீதியாக மக்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு து.யு சரத் ரவீந்திர , மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டன்லி டிமெல் ,இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை செயலாளர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் , மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ,இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி , திட்ட முகாமையாளர் , மாவட்ட திட்ட இணைப்பாளர் , பிரதேச இணைப்பாளர்கள் , சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொலீஸ் இராணுவ அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்,

இத்திட்டத்திற்கான நிதியுதவியானது செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தனால் வழங்கப்படுகின்றது. சம்மேளனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு போப் மெகறோ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அவரது உரையில் இந்த சமுதாய மீள்அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் வாயிலாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் பிரதேச மக்கள் முதல் அரச அதிகாரிகளும் இணைந்து செயற்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்பதனை குறிப்பிட்டார். இத்திட்டமானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அனுமதி மற்றும் சிறந்த வழிக்காட்டல் மற்றும் ஒத்துழைப்போடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.












Advertisement

0 comments:

Post a Comment

 
Top