முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சிக்குடா ,கொண்டச்சி கொக்குப்படையான் , காயாக்குளி ஆகிய கிராமங்களில் போக்கு வரத்து சேவைகள் உரிய முறையில் இல்லாததன் காரணத்தினால் பாடசாலை மாணவர்கள்,அக்கிராம மக்கள் என அனைவரும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் சுனேஸ் சோசை தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,

 முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அவதானத்தின் படி கொண்டச்சிக்குடா , கொண்டச்சி கொக்குப்படையான் , காயாக்குளி ஆகிய கிராமங்களை மையப்படுத்திய போக்குவரத்து சேவைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. மக்களின் நலன் கருதியும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் போக்குவரத்து சேவையினை சீர் செய்ய வேண்டியுள்ளது.

 ஆனாலும் நாளாந்தம் இப்பகுதி மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருப்பதனை பிரஜைகள் குழு அவதானித்துக் கொண்டு இருப்பதோடு மக்களும் பல தடவைகள் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்னமும் அதிகாரிகள் மக்களை புறக்கணித்துக் கொண்டு கண் இருந்தும் பார்வையற்றவர்களாகவும் வாய் இருந்தும் ஊமைகளாகவும் இருக்கின்றனர்.

 குறிப்பாக மன்னாரில் இருந்து அரிப்பிற்கு பஸ் சேவையானது காலையில் 7.45 மணிக்கு முருங்கன் ஊடாக சிலாவத்துறையினை வந்தடைந்து மீண்டும் கொக்குப்படையான் வரைக்கும் சென்று திரும்புவது தான் வழமையான சேவையாக காணப்பட்டது. இருந்த போதிலும் கடந்த பல காலமாக இவ் சேவையானது புறக்கணிக்கப்பட்ட நிலையில் முசலி பிரதேச செயலகத்துடன் மக்களை இறக்கி விட்டு செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது.

 இது மட்டுமன்றி காயாக்குழியில் இருந்து சிலாவத்துறைக்கு பாடசாலைக்கு வருபவர்கள் காலையில் முள்ளிக்குளத்தில் இருந்து வரும் பஸ்சில் பாடசாலைக்கு வந்து மாலையில் பாடசாலை முடிந்தவுடன் பசிக் கொடுமையில் 07 கிலோ மீற்றர் தூரம் பாடசாலையில் இருந்து காயாக் குழிக்கு நடந்து போவதை பிரஜைகள் குழு அவதானித்துக் கொண்டு இருக்கின்றது.

 இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் , வயோதிபர்கள் கற்பிணிதாய்மார் ,பாடசாலை மணவர்கள் என பலரும் பல மைல் தூரம் நடந்து செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பாதை சீர் இல்லை என அதிகாரிகளினால் கூறப்பட்ட போதிலும் தற்போது சரியான முறையில் பாதை சீர் செய்யப்பட்டுள்ளதினை எல்லோரும் அறிவார்கள். இருந்த போதிலும் மக்கள் தேவை கருதி எங்கு சென்றாலும் ஒட்டோவை நம்பி தான் செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

 குறிப்பாக சிலாவத்துறையில் இருந்து கொண்டச்சிக்குடாவிற்கு செல்வதென்றால் 300ரூபா கொடுத்துதான் செல்ல வேண்டிய தேவைப்பாடுள்ளது. மற்றும் நேரத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்களினால் தண்டிக்கப்பட்டு வருவதனையும் அறிய முடிகின்றது. இது குறித்து மன்னார் போக்குவரத்து சபைக்கு பல தடவைகள் மனு அனும்பியும் இதற்கான சரியான பதிலினை எமது பிரஜைகள் குழுவிற்கு அனுப்பி வைக்கவும் இல்லை இதைப்பற்றி உரிய அதிகாரி நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

 எனவே மக்களின் நலன் கருதியும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் போக்குவரத்து சேவையினை சீர் செய்து தரும் படி முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் சார்பாக உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுவதாக குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

1 comments:

  1. Pirajaikal kudu Ammaipar awargallah musali tamil hiramangal madum than thariuma

    ReplyDelete

 
Top