மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவில் நேற்று திங்கட்கிழமை 11.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த நண்பர்களான இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வாகரை கண்டலடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சென்றுள்ளனர். 

 அங்கிருந்து மீண்டும் கதிரவெளி பால்சேனைக்குச் செல்லும் வழியில், வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி சமிக்ஞைக்காக நாட்டப்பட்டிருந்த கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து இருவரையும் வாகரை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிகிச்சை பலனின்றி நாகராசா மோகனராஜ் (வயது 18) மரணமடைந்துள்ளார்.

 அதேவேளை, அவருடன் கூடச்சென்ற அவரது நண்பரான கதிர்காமத்தம்பி ஜீவேந்திரன் (வயது 18) மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மரணமடைந்த நாகராசா மோகனராஜ் என்பவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Advertisement

0 comments:

Post a Comment

 
Top