மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரை பிணையில் செல்ல மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது கடந்த 9 ஆம் திகதி ( 9-12-2013 ) தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறி பொன்தீவு கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65 பேரை முருங்கன் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பின் இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது 18 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனைய 47 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முருங்கன் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மூவர் மன்னார் நீதிமன்றில் ஆஜராகியிருந்த போது குறித்த மூவர் உற்பட 21 பேரையும் இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 21 பேரும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த 21 பேரையும் தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபாய் பெருமதியான சரீரப்பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
இவர்களை மீண்டும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மன்றில் அஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இவர்கள் 21 பேர் சார்பாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உட்பட்ட சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா,ஜோன்தாசன் துசித், எஸ்.ஜெபநேசன் லோகு ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top