உருளைக்கிழங்கு கொள்கலன்களில் மறைத்து கருத்தடை ஊசிகளை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான பாகிஸ்தான் பிரஜையை சுங்கப் பிரிவின் விசேட புலனாய்வுக் குழு நேற்று கைது செய்தது.


 கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள மறைவிடமொன்றில் மறைந்திருந்த போது விசேட சுங்க புலனாய்வு பிரிவின் அத்தியட்சகரான ஜி.பீ. ஞானராஜ் தலைமையிலான குழுவினர் இவரை கைது செய்தனர். நேற்று நண்பகல் 12.30 மணியளவில் குறித்த இடத்தை சுற்றிவளைத்த சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் தற்போது மேலதிக விசாரணைக்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பதிவு செய்து கொண்ட சுங்கப் புலனாய்வுப் பிரிவு மேலும் மூன்று சந்தேக நபர்களை தேடி வலை விரித்துள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த மூன்று உருளைக்கிழங்கு கொள்கலன்களிலிருந்து 30,000 கருக்கலைப்பு ஊசி மருந்து போத்தல்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர்.

 குறித்த மருந்துகளின் பெறுமதி சுமார் 30 மில்லியன் என சுங்கப் பிரிவினரால் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பிச்சென்ற சந்தேக நபரான பாகிஸ்தானியரே நேற்று சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த சட்டவிரோத கருக்கலைப்பு மருந்து ஊசிகள் உள்நாட்டில் யாருக்காக கடத்தி வரப்பட்டது, பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பிலான விசாரணைகளை சுங்க அத்தியட்சர் மாலி பியசேனவின் வழிநடத்தலில் விசேட சுங்க புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top