தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை மன்னாரில் நடாத்த மன்னார் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக அண்மையில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


 மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இவ்விழா தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில் இவ்விழா இடம்பெறும். முதல் நாள் காலையில் தொடக்க விழாவும் இறுதி நாள் மாலையில் நிறைவு விழாவும் இடம்பெறும். இதைவிட ஒவ்வொரு நாளும் ஆய்வரங்கு, இலக்கிய அரங்கு, கலையரங்கு என மூன்று அமர்வுகள் இடம்பெறும்.

ஆய்வரங்குகள் தனிநாயகம் அடிகளாரின் பரந்துபட்ட தமிழ்ப் பணிகளை ஆய்வுநோக்கில் அணுகும் வகையில் இடம்பெறும். நூற்றாண்டு விழா மலர் ஒன்றும் வெளியிடப்படும். இவ்விழா தொடர்பாக பல உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதிக்குழு, ஆய்வரங்கக்குழு, மலர்க்குழு, இலக்கியக்குழு, கலைக்குழு, விளம்பரக்குழு, உபசரணைக்குழு என்பன அவற்றில் சிலவாகும். தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி மன்னார் நகரில் அடிகளாரின் சிலையை நிறுவுவதற்கும் மன்னார் தமிழ்ச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மன்னாரில் உள்ள பாடசாலைகள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், மத அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று இவ்விழாவை பெருவிழாவாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top