மன்னார்  மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை வைத்திருந்த 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொறுப்பதிகாரி பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.


வவுனியா மாவட்டத்தில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை வைத்திருந்த 9 வர்த்தகர்களுக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளன. 

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை வைத்திருந்த 6 வர்த்தகர்களுக்கு  எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், வவுனியா மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக 07 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 12,000 ரூபா தண்டம் அவர்களிடமிருந்து அறவிடப்பட்டன. இதில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பெப்ரவரி மாதம் வவுனியாவில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு  42,000 தண்டம் அறவிடப்பட்டன. 

மன்னார் மாவட்டத்தில்  முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு  எதிராக 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 32,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். 

2012ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரையிடாத வர்த்தகர்களுக்கு எதிராக 73 வழக்குகள் தாக்கல்; செய்யப்பட்டன. இந்நிலையில் 56 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு இலட்சத்து 85,500 ரூபா தண்டமும் அவர்களிடமிருந்து அறவிடப்பட்டன. ஏனைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

அனைத்து வர்த்தகர்களும் நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரையிடுவதை தவறாது மேற்கொள்ள வேண்டுமெனவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொறுப்பதிகாரி பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top