சட்டவிரோத மீன்பிடி மற்றும் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற சம்பவங்களை கண்டித்து முழங்காவில் பகுதியில் இருந்து நாச்சிக்குடா வரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.


 போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் அவர்களினால் இந்திய மீனவர்களின் அத்து மீறலைக்கண்டித்து கடந்த 27 ஆம் திகதி முள்ளிக்குளம் கடற்கரையில் இருந்து பேரணி ஒன்றை ஆரம்பித்திருந்தார். அவருடைய பேரணி கடற்கரை வீதியூடாக சென்று மன்னார் தீவினை சென்றடைந்தது.பின் மன்னாரில் இருந்து மீண்டும் பேரணியாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட மீனவக்கிராமங்களுக்கு சென்றுள்ளார்

இந்த நிலையில் 07 ஆவது நாளாக அவருடைய நடைப்பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூனகரி முழங்காவில் கிராமத்தை சென்றடைந்தது. இந்த நிலையில் வி.சகாதேவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும்,குறித்த பிரதேசத்தில் இடம் பெற்று வரும் சட்ட விரோத கடல் தொழில்,தடைசெய்யப்பட்ட கடற்தொழில் மீன்பிடி, இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ஆகியவற்றை கண்டித்து முழங்காவில் இரணை மாதா நகர் கடல் தொழில் கூட்டுறவுச்சங்கம் மற்றும் அப்பகுதி மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

 குறித்த பேரணியானது முழங்காவில் இரணை மாதா நகர் கடல் தொழில் கூட்டுறவுச்சங்கத்திற்கு முன் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமான நிலையில் நச்சிககுடா சந்தியில் முடிவடைந்தது. இதன் போது ஆயிரக்கணக்கான மீனவர்களும்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டதோடு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றதாக தெரிவித்த போரினால் பாதீக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் அந்த மீனவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை தன்னிடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top