திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு நேற்றும், நேற்று முன்தினமும் வந்த பக்தர்கள் பாலாவிக் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதனர்.நேற்று முன்தினம் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தேர்த்திருவிழாவும், நேற்றைய தினம் தீர்த்த உற்சவமும் மிகச் சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தன.
தீர்த்தத் திருவிழாவான நேற்று பாலாவியில் நீராடுவதற்குச் சென்றனர். அவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாலாவித் தீர்த்தக் கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் பெரியளவிலான புத்தர் சிலை ஒன்று காவித் துணியொன்றினால் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த வெளியிடங்களைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு ஏற்பட்ட கதிதான் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கும் ஏற்படப் போகிறது என்று சிலர் வாய்விட்டுப் புலம்பினர்.
இன்னும் சிலர் புத்தர் சிலையைப் பார்த்தவாறு கண்ணீர் சிந்தி அழுதனர். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கண்கலங்கினர். புத்தர் சிலை அமைக்கப்பட்டடுள்ள காணிக்குள் தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலையை அமைத்துத் தமது எண்ணத்தை நிறைவேற்ற முனையும் பேரினவாதிகளின் செயலைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் தாம் உள்ளமையை எண்ணிப் பலர் மனம் வெதும்பியதை அவதானிக்க முடிந்தது.
தொடர்பு பட்ட செய்திகள்
ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான அருள்மிகு திருக்கேதீச்சர கோவில் தேர் திருவிழா-2012(99புகைப்படங்கள் இணைப்பு
ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான அருள்மிகு திருக்கேதீச்சர கோவில் தேர் திருவிழா-2012(99புகைப்படங்கள் இணைப்பு
--
0 comments:
Post a Comment