மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்தும் திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்படுவதன் காரணமாகவும் பின் திடீரென அதி வலு கொண்ட மின்சாரம் வருவதன் காரணத்தினாலும் பல மின் பாவனையாளர்களது பல இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த மின்சார உபகரணங்கள் பழுதடைந்திருப்பதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில வாரங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு பல தடவைகள் மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது. பினனர்; திடீரென மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களிலும் உள்ள மின் பாவனையாளர்களது தொலைக்காட்சிப்பெட்டி, கணினி, குளிர்சாதனப்பெட்டி, வானொலி உள்ளிட்ட பல்வேறு பெறுமதி வாய்ந்த மின்சாதனப்பொருட்கள் பழுதடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்சார பிரச்சினை பல்வேறு விதமாக வந்துகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் மின்சாரம் நாள் கணக்கில் தடைப்படுகின்ற போதும் மாத முடிவில் அதிகரித்து தொகையைக்கொண்ட மின் பட்டியலே மின் பாவனையாளர்களுக்கு கிடைப்பதாகவும் மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மின்சார தடை தொடர்பில் மன்னார் மின்சார சபையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொது தற்போது மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் காற்றின் காரணமாக மின் வயர்களில் ஆட்டம் காணப்படுவதன் காரணமாக திடீர் திடீர் என மின் தடைப்படுவதாக ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top