மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், முசலி பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காடுகளில் பெறுமதியான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்டுப்பகுதியில் பாலை, முதிரை, கருங்காலி ஆகிய பெறுமதியான மரங்கள் அடர்ந்து காணப்படும் நிலையில் தினமும் பெருமளவில் அவை வெட்டி சாய்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்விதம் வெட்டப்படும் மரங்களில் இருந்து பெறப்படும் பலகைகள், மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்புடைய செல்வாக்கு நிறைந்த ஒரு சிலரே இவ்விதம் மரங்களை சட்டவிரோதமாக வெட்டி பலகைகளாக அவற்றை தென்பகுதிக்கு கடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள காடுகள் புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களின் எல்லைகள் வரை உள்ளதினால் மரங்களை வெட்டி வியாபார ரீதியில் அதனை தென்பகுதிக்கு இலகுவாக கடத்தக்கூடியதாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment